தை பிறந்தால் வழி பிறக்கும் 2013



'‘தை பிறந்தால் வழி பிறக்கும்’'

 என்ற பழமொழி எப்படி ஏற்பட்டது தெரியுமா? ‘‘கண்ணை இமை காப்பது போல விவசாய நிலத்தை பாதுகாத்துநாற்றுகளை நட்டுஅவற்றுக்கு தேவையான உரம்நீரை இட்டு பாதுகாக்கும் காலகட்டத்தில் விவசாயின் கையில் நையா பைசா இருக்காது. 




நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து அதை விற்று முடித்த பிறகே, அவன் கையில் காசு இருக்கும். புதுத் துணி, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது; வாரிசுகளின் திருமணம் என மகிழ்ச்சியோடு தை மாதத்தில் ஒவ்வொன்றாக மன நிறைவோடு செய்து முடிப்பான் விவசாயி. 

 இதனால்தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழியே தோன்றியது என்கிறார்கள் முன்னோர்கள். பொங்கல் திருநாள் ஒருநாளில் முடியும் பண்டிகை அல்ல. போகிப் பண்டிகைதைப்பொங்கல்மாட்டுப் பொங்கல்காணும் பொங்கல் என நான்கு நாட்களும் தமிழர்களுக்கு உற்சாகமான நாட்கள்தான்.

போகி
மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. பழையன கழிதலும்; புதியன புகுதலும் இத்தினத்தில்தான் நடக்கிறது. 
இதற்காகதான் தைப் பொங்கலுக்கு முன்பே வீட்டுக்கு புதிதாக
வெள்ளையடித்து, பழையப் பொருட்களை மூட்டைக்கட்டி போகிப் பண்டிகை அன்று தீயிட்டு கொளுத்துகிறோம். இப்படி செய்யும் போது பழையன கழிந்து விடுகிறது.




தைப் பொங்கல் 
 சந்திரன், சூரியன் போக்கை வைத்து காலத்தை கணித்தவர்கள் நம் பழம்பெருமைக் கொண்ட தமிழர்கள். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் இயற்கை நிகழ்வை தைத் திருநாளாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் தமிழர்கள் புத்தாடை அணிவார்கள். அறுவவையில் கிடைத்த அரிசி, கரும்பு சாறில் எடுக்கப்பட்ட வெல்லம், பால், நெய் இட்டு பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் போதே வீட்டில் உள்ளவர்கள் பொங்கலோ.... பொங்கல் என்று உற்சாக முழக்கம் செய்வார்கள். சூரியனுக்கு தனியாக பூஜை செய்து வணங்கி மகிழ்வார்கள்.

மாட்டுப் பொங்கல்
தைப் பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாள் வருவது மாட்டுப் பொங்கல். உழவர்களின் நண்பர்களான கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் உழவுக்கு உதவிய விவசாய கருவிகள், ஏர் ஆகியவற்றை சுத்தம் செய்து மஞ்சள், குங்கும் வைத்து வழிபடுவார்கள். கால்நடைகளையும் சுத்தம் செய்து, அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அழகுப்படுத்துவார்கள். அதற்கு பொங்கல் கொடுத்தும் அந்நாளை கொண்டாடி மகிழ்வர். கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் மாட்டுப் பொங்கல் களைகட்டும்.

காணும் பொங்கல்
கடைசி நாளை காணும் பொங்கலாக தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இதை கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கிறார்கள். இன்றைய தினத்தில் உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வார்கள். பெரியோர்களிடம் ஆசி பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் உரி அடித்தல், கலைநிகழ்ச்சிகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இந்நாளை கழிப்பார்கள்.

 இப்படி நான்கு நாட்களுக்கு களைகட்டும். பொங்கல் விழா தமிழர்களின் பெருவிழா!
உலகில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய 
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....